சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.075
திருநாவுக்கரசர்
தேவாரம்
தொண்டனேன் பட்டது என்னே! தூய பண் - கொல்லி (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=C8xKUbvG84M |
4.076
திருநாவுக்கரசர்
தேவாரம்
மருள் அவா மனத்தன் ஆகி பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=bz7ls6HtjmQ Audio: https://www.youtube.com/watch?v=tFKw3jGkwP8 |
4.077
திருநாவுக்கரசர்
தேவாரம்
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் பண் - திருநேரிசை (பொது -தனித் திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=cGo7sTd0afU |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.075  
தொண்டனேன் பட்டது என்னே! தூய
பண் - கொல்லி (திருத்தலம் பொது -தனித் திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தொண்டனேன் பட்டது என்னே! தூய காவிரியின் நன் நீர் கொண்டு இருக்கு ஓதி, ஆட்டி, குங்குமக் குழம்பு சாத்தி, இண்டை கொண்டு ஏற நோக்கி, ஈசனை, எம்பிரானை, கண்டனை, கண்டிராதே காலத்தைக் கழித்த ஆறே! | [1] |
பின் இலேன், முன் இலேன், நான்; பிறப்பு அறுத்து அருள் செய்வானே! என் இலேன், நாயினேன் நான்? இளங் கதிர்ப் பயலைத் திங்கள் சில்-நிலா எறிக்கும் சென்னிச் சிவபுரத்து அமரர் ஏறே! நின் அலால் களைகண் ஆரே? நீறு சேர் அகலத்தானே! | [2] |
கள்ளனேன் கள்ளத் தொண்டு ஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி, தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்; உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கினேன்; வெள்கி, நானும் விலா இறச் சிரித்திட்டனே! | [3] |
உடம்பு எனும் மனை அகத்து(வ்), உள்ளமே தகளி ஆக, மடம் படும் உணர் நெய் அட்டி, உயிர் எனும் திரி மயக்கி, இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில், கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே. | [4] |
வஞ்சப் பெண் அரங்கு கோயில், வாள் எயிற்று அரவம் துஞ்சா; வஞ்சப் பெண் இருந்த குழல் வான் தவழ் மதியம் தோயும்; வஞ்சப் பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழல் உற்று வஞ்சப் பெண் உறக்கம் ஆனேன்; வஞ்சனேன் என் செய்கேனே! | [5] |
உள்குவார் உள்ளத்தானை, உணர்வு எனும் பெருமையானை, உள்கினேன், நானும் காண்பான்; உருகினேன்; ஊறி ஊறி எள்கினேன்; எந்தை! பெம்மான்! இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே? | [6] |
மோத்தையைக் கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து, உன் வார்த்தையைப் பேச ஒட்டா மயக்க, நான் மயங்குகின்றேன்; சீத்தையை, சிதம்பு தன்னை, செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா ஊத்தையை, கழிக்கும் வண்ணம் உணர்வு தா, உலக மூர்த்தீ! | [7] |
அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி, ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றி, பாவித்தேன், பரமா, நின்னை! சங்கு ஒத்த மேனிச் செல்வா! சாதல் நாள், நாயேன் உன்னை, எங்கு உற்றாய்? என்ற போதா, இங்கு உற்றேன் என் கண்டாயே! | [8] |
வெள்ள நீர்ச் சடையனார் தாம் வினவுவார் போல வந்து, என் உள்ளமே புகுந்து நின்றார்க்கு, உறங்கும் நான் புடைகள் பேர்ந்து கள்ளரோ, புகுந்தீர்? என்ன, கலந்து தான் நோக்கி, நக்கு, வெள்ளரோம்! என்று, நின்றார்-விளங்கு இளம்பிறையனாரே. | [9] |
பெருவிரல் இறைதான் ஊன்ற, பிறை எயிறு இலங்க அங்காந்து அரு வரை அனைய தோளான் அரக்கன், அன்று, அலறி வீழ்ந்தான்; இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்க, நான் திரியும் ஆறே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.076  
மருள் அவா மனத்தன் ஆகி
பண் - திருநேரிசை (திருத்தலம் பொது -தனித் திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன், மதி இலாதேன்; இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் அருள் அவாப் பெறுதல் இன்றி, அஞ்சி, நான் அலமந்தேற்குப் பொருள் அவாத் தந்த ஆறே போது போய்ப் புலர்ந்தது அன்றே! | [1] |
மெய்ம்மை ஆம் உழவைச் செய்து, விருப்பு எனும் வித்தை வித்தி, பொய்ம்மை ஆம் களையை வாங்கி, பொறை எனும் நீரைப் பாய்ச்சி, தம்மையும் நோக்கிக் கண்டு, தகவு எனும் வேலி இட்டு, செம்மையுள் நிற்பர் ஆகில், சிவகதி விளையும் அன்றே! | [2] |
எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று, இங்கு எம்பிரான் ஆட்ட, ஆடி, என் உளே உழிதர் வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கும் என்றால், எம்பிரான் என்னின் அல்லால், என் செய்கேன், ஏழையேனே? | [3] |
காயமே கோயில் ஆக, கடிமனம் அடிமை ஆக, வாய்மையே தூய்மை ஆக, மனமனி இலிங்கம் ஆக, நேயமே நெய்யும் பாலா, நிறைய நீர் அமைய ஆட்டி, பூசனை ஈசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே. | [4] |
வஞ்சகப் புலையனேனை வழி அறத் தொண்டில் பூட்டி அஞ்சல்! என்று ஆண்டுகொண்டாய்; அதுவும் நின் பெருமை அன்றே! நெஞ்சு அகம் கனிய மாட்டேன்; நின்னை உள் வைக்க மாட்டேன்; நஞ்சு இடம் கொண்ட கண்டா! என், என நன்மைதானே? | [5] |
நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்; ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க, நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே! | [6] |
விள்ளத்தான் ஒன்று மாட்டேன்; விருப்பு எனும் வேட்கையாலே வள்ளத் தேன் போல நுன்னை வாய் மடுத்து உண்டிடாமே, உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும், கள்ளத்தே நிற்றி; அம்மா! எங்ஙனம் காணும் ஆறே? | [7] |
ஆசை வன் பாசம் எய்தி, அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய், ஊசலாட்டுண்டு, வாளா, உழந்து நான் உழிதராமே,- தேசனே! தேசமூர்த்தி! திரு மறைக்காடு மேய ஈசனே!-உன் தன் பாதம் ஏத்தும் ஆறு அருள், எம்மானே! | [8] |
நிறைவு இலேன், நேசம் இல்லேன்; நினைவு இலேன்; வினையின் பாசம் மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள், என் எம்மான்! சிறை இலேன் செய்வது என்னே? திருவடி பரவி ஏத்தக் குறைவு இலேன்; குற்றம் தீராய்-கொன்றை சேர் சடையினானே! | [9] |
நடு இலாக் காலன் வந்து நணுகும் போது அறிய ஒண்ணா; அடுவன, அஞ்சு பூதம்; அவை தமக்கு ஆற்றல் ஆகேன்; படுவன, பலவும் குற்றம்; பாங்கு இலா, மனிதர் வாழ்க்கை; கெடுவது, இப் பிறவி சீ! சீ!-கிளர் ஒளிச் சடையினீரே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.077  
கடும்பகல் நட்டம் ஆடி, கையில்
பண் - திருநேரிசை (திருத்தலம் பொது -தனித் திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, இடும் பலிக்கு இல்லம் தோறும் உழி தரும் இறைவனீரே! நெடும் பொறை மலையர் பாவை நேரிழை நெறி மென் கூந்தல் கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ? | [1] |
கோவணம் உடுத்த ஆறும், கோள் அரவு அசைத்த ஆறும், தீ வணச் சாம்பர் பூசித் திரு உரு இருந்த ஆறும், பூவணக் கிழவனாரை புலி உரி அரையனாரை, ஏ வணச் சிலையினாரை, யாவரே எழுதுவாரே? | [2] |
விளக்கினால் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும்; துளக்கு இல் நல் மலர் தொடுத்தால்-தூய விண் ஏறல் ஆகும்; விளக்கு இட்டார் பேறு, சொல்லின், மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும்; அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளும் ஆறே! | [3] |
சந்திரன் சடையில் வைத்த சங்கரன், சாமவேதி, அந்தரத்து அமரர் பெம்மான், ஆன் நல் வெள் ஊர்தியான் தன் மந்திரம் நமச்சிவாய ஆக, நீறு அணியப் பெற்றால், வெந்து அறும், வினையும் நோயும் வெவ் அழல் விறகு இட்டன்றே! | [4] |
புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்து இடைப் புகுந்து நின்று துள்ளுவர், சூறை கொள்வர்; தூ நெறி விளைய ஒட்டார் முள் உடையவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள் இடை மறைந்து நின்று, அங்கு உணர்வினால் எய்யல் ஆமே. | [5] |
தொண்டனேன் பிறந்து, வாளா தொல் வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து, நாளும் பெரியது ஓர் அவாவில் பட்டேன்; அண்டனே! அமரர்கோவே! அறிவனே! அஞ்சல் என்னாய்- தெண் திரைக் கங்கை சூடும் திருத் தகு சடையினானே! | [6] |
பாறினாய்,-பாவி நெஞ்சே!-பன்றி போல் அளற்றில் பட்டு தேறி நீ நினைதி ஆயின், சிவகதி திண்ணம் ஆகும்; ஊறலே உவர்ப்பு நாறி, உதிரமே ஒழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டு கோலமாக் கருதினாயே! | [7] |
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர வைத்த கால், அரக்கனோ தன் வான்முடி தனக்கு நேர்ந்தான்; மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி தன் மேல் வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே. | [8] |